சுப.நற்குணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப.நற்குணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

தன்னுடைய தாய்மொழியின் எழுத்து வடிவத்தைக் காப்பதற்குச் சப்பான்காரன் பெரும்பாடு படுவதற்கும் அஞ்சுவதே இல்லை. எவ்வளவு சிக்கல் - சிரமம் எதிர்கொண்டு வந்தாலும், தொழில்நுடபம் வேகமாக வளர்ந்தாலும், படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடர்பபடுகள் ஏற்பட்டாலும் தங்கள் மொழியின் வரிவடிவத்தை நிலைப்படுத்துவதில் சப்பானியர் உறுதியாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்திற்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ சப்பானியர் தங்கள் எழுத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்துகொள்ளவில்லை. மொழியின் தனித்த அடையாளம் சிதைந்து; சீரழிந்துபோகும் அளவுக்கு எழுத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய வரிவடித்தின் தனி அடையாளத்தையும் தனிச்சிறப்பையும் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் - எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல சான்று.
//இரங்கானா அல்லது கதங்கானா முறையில் அல்லது ரோமானிய (ஆங்கில) எழுத்துகளில் சப்பானிய எழுத்துகளை அடித்தால், படவெழுத்துகள் வரும் முறையில் கணிப்பலகையை (Keyboard) அமைத்துள்ளனர். 'கஞ்சி' எழுத்துகளின் உச்சரிப்பினைத் தட்டச்சு செய்தால், கஞ்சி அச்சில் வரும் முறையில் விசைப்பலகையை அமைத்துக்கொண்டார்களே தவிர, விசைப்பலகையின் விசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எழுத்து வடிவங்களைச் சிதைத்துக் கொள்ளவில்லை. அன்றாடம் ஏறத்தாழ 2000 கஞ்சி வடிவங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளது. இதனால், மிகவும் மெதுவாகவே கணியச்சிட முடிகிறது.
  • இதனைத் தவிர்க்க ஒருவர் கண்டுபிடித்த முறையே பன்முரசு முறைக் கணிப்பலகை. சப்பானியர்கள் தங்கள் எழுத்தைச் சிதைக்கவில்லை. மாறாகத் தேவைக்கேற்ப கணினி விசைப்பலகையை அமைத்துக்கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். //
சப்பானியரின் இந்த உயர்ந்த மொழிமானம்; எழுத்து வடிவக் காப்புணர்வோடு, இன்று தமிழ் எழுத்துகளைச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் தமிழர்கள் சிலரின் மொழி உணர்வு; வரிவடிவக் காப்பு உணர்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஓர்ந்து பாருங்கள்.
  • இ, ஈ, உ, ஊகார தமிழ் எழுத்து வரிவடிவத்தைச் சிதைத்து புதிய வகையிலான எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்த துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு இதனைச் சிந்திக்க நேரமில்லாமல் போகலாம். அல்லது இதனைக் கண்டும் காணாததுபோல கண்மூடி - வாய்ப்பொத்தி மௌனியாக இருந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மைத் தமிழ் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றனர். அத்தகையவர் அன்புகூர்ந்து இதனைச் சிந்திக்க வேண்டும்; எழுத்துச் சீரழிப்பைத் தடுப்பதற்கு தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். காரணம்,
இப்போது இல்லாவிட்டால்; இனி
என்றுமே தமிழைக் காப்பாற்ற முடியாது.

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)



தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.


இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.

மாதிரி 1:-

இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.

மாதிரி 2:

இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?

இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-

1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)

மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-

1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.

2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.

3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.

4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்

5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.

6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.

7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.

8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.

9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.

10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.

தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தற்போது நடப்பில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்குச் சிலர் புறக்கதவு வழியாகத் தீவிரமாக முயன்று வருவதாகச் செய்திகள் அடிபடுகின்றன.

“இவ்வாண்டு சூன் 23-27 வரை தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் இது குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கலைஞர் கருணாநிதி புதிய எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடக்கின்றன.” என்றெல்லாம் தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டிருக்கின்றன.

செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் சிலர் தங்களின் ஆளுமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழ் எழுத்துகளில் புதிய மாற்றங்களைச் செய்ய முனைவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இவர்களின் இந்தத் தனிப்பட்ட நிகழ்ப்பு (Personal Agenda) பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் சிலருடைய கண்டிப்பான எதிர்ப்புகளினால் தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சி மண்ணைக் கௌவிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இப்போது தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவர்கள் இடபெற்றுவிட்ட நிலையில்..; தமிழக முதல்வருக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ஆகிவிட்ட நிலையில்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த நிகழ்ப்பை மீண்டும் தூசுதட்டி கையில் எடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட நல்லறிஞர்கள் இந்தப் புல்லறிவுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கத் துணிந்துவிட்டனர். இந்தச் சிக்கல் இன்னும் பெரிதாக வெடிக்காவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

இது இம்மாட்டில் நிற்க, இந்தப் புதிய எழுத்து மாற்றம் என்பது என்ன? எதை மாற்றப் போகிறார்கள்? ஏன் மாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் எழுத்து மாற்றம் தமிழைச் சீர்படுத்துமா? அல்லது சீரழிக்குமா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இன்று தமிழில் நாம் பயன்படுத்திவரும் 247 எழுத்துகளில், ஏற்கனவே பல காலக்கட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் காலத்திலும் பின்னர் அண்மை நூற்றாண்டில், பெரியார் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாறு.


ஆனால் இப்போது, சிலர் புதிதாகச் செய்ய விரும்பும் மாற்றங்கள் தமிழ் எழுத்து அமைப்பில் பூதாகரமான சிதைவை ஏற்படுத்துகின்றன என்று நற்றமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைப் படிப்படியாகக் காண்போமா?

இப்போது சீர்த்திருத்தம் என்ற பெயரில் மாற்றப்பட வேண்டிய எழுத்துகளாக இகர - ஈகார, உகர – ஊகார எழுத்துகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

காரணம், இவை நான்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறதாம். குறிப்பாக, உகர ஊகார எழுத்துகளை எழுதுவதற்கு நிறைய குறியீடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கவனிக்க:-

1)கு, டு, மு, ரு, ழு, ளு –இந்த 6 உகரங்களில் கீழ்நோக்கிச் சுழிக்க வேண்டும்.

2)ங, சு, பு, யு, வு –இந்த 5 எழுத்துகளில் கீழ்நோக்கி ஒரு கால் இட வேண்டும்.

3)ஞு, ணு, து, நு, லு, று, னு –இந்த 7 உகரங்களில் கீழே அரை சுற்றுவந்து மேல்நோக்கி கோடு ஏற்ற வேண்டும்.

இப்படியாக உகர எழுத்துகள் ஒரு சீர்மையில் இல்லாமல், பல்வகைப்பட்டு இருக்கின்றனவாம். ஊகாரமும் இப்படியேதானாம். ஆகவேதான், இவற்றைச் சீரமைத்து ஒரே அமைப்பில் எழுத வேண்டுமாம். அதற்காகக் கீழே உள்ளது போன்ற குறியீடுகளை பயன்படுத்த வேண்டுமாம்.

மேலே படத்தில் காட்டப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தினால், அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமாம். குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்களாம். தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாமாம்.

எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித்தானாம்.

(மாற்றி அமைக்கப்பட்ட இகர, ஈகார உகர, ஊகாரங்கள்)

இந்தப் புதிய மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் பெரிதாக ஏதும் பயனுண்டா என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லை! என்பதே பதில். ஆனால், இதனால் மேலே சொன்னது போன்ற சில நன்மைகள் உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதங்கள் ஏற்புடையதாகத் இல்லை என்பது மட்டுமல்ல அறிவுடைமையானதும் அல்ல.

அவர்களின் வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை வைக்க முடியும்.

1)அதிகமான எழுத்து வடிவங்களை நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

=>இத்தனை காலமும் அடிப்படை எழுத்துகளாக தமிழில் 30 மட்டுமே இருந்தாலும், நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும், அவற்றுக்குரிய வடிவங்களையும் பல்லாயிரம் கோடி தமிழ் மக்கள் எந்தவொரு சிறு சிக்கலும் இன்றி படித்தும் எழுதியும் நினைவில் வைத்தும் வந்திருக்கிறோமே எப்படி?

=>பிற்பட்ட காலத்து மக்களே இவற்றைப் படிக்கவும் எழுதவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிந்திருக்கிறது என்றால், அறிவும் ஆற்றலும் நுட்பமும் நிரம்ப இருக்கும் தற்கால மக்களாலும் எதிர்கால மக்களாலும் முடியாதா என்ன?


2)குழந்தைகள் வெகு எளிதாகத் தமிழ் எழுத்துகளைப் படித்துக்கொள்வார்கள்.

=>எளிதாகப் படித்துக்கொள்ளுதல் என்பது கற்பித்தலையும் கற்றலையும் சார்ந்ததே அன்றி எழுத்துகளைச் சார்ந்திருப்பது அல்ல. அப்படிப் பார்த்தால், தமிழைவிட அதிகமான எழுத்துகளை வைத்திருக்கும் சீனர்களும், கொரியர்களும், சப்பானியர்களும் கல்வியில் தமிழர்களை விடவும் பின்தங்கி இருக்க வேண்டும் அல்லவா?

=>சீனர்களும் கொரியர்களும் சப்பனியர்களும், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழைச் சீர்படுத்த துடியாய் துடிப்பவர்களைவிட பல மடங்கு துடிதுடித்து அவர்கள் மொழியைத் திருத்தியிருக்க வேண்டுமல்லவா?

3)தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படும் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

=>இற்றைக் காலத் தொழிநுட்பத்தின் குழந்தையாகிய கணினியிலும் கைப்பேசியிலும் தமிழ்க் எழுத்துகளை எழுதுவதில் பாரிய சிக்கல் ஏதுமில்லை என்ற சூழலில் எழுத்துக் குறியீடுகளைக் குறைக்க வேண்டியதன் தேவையும் அவசியமும் என்ன?

=>குறியீடுகளைக் குறைப்பதனால் தமிழ்மொழியில் ஏற்படப் போகும் ஆக்கங்கள் – வளர்ச்சிகள் என்னென்ன?

=>குறியீடுகளைக் குறைக்கிறோம் என்று சொல்லி, தமிழ் எழுத்துகளின் தனித்த அடையாளத்தைச் சிதைப்பது முறைதானா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்டால் அதனை மக்கள் உடனே புரிந்துகொண்டு சரளமாகப் படித்துவிடவோ அல்லது எழுதிவிடவோ முடியுமா?

=>எழுத்துகளை மாற்றி அமைத்துவிட்ட பிறகு, பழைய எழுத்து முறையில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியங்களைப் படிப்பது எப்படி?

=>கணினி, கைப்பேசி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய எழுத்து வடிவங்களைச் செய்வது யார்? எப்படி? எப்போது?

இப்படியாக பல கேள்விகளுக்கு எழுத்துச் சீர்திருத்த மேதைகள் இன்னும் பதில்கள் சொல்லியப்பாடில்லை. ஆனால், பாத்திரமே இல்லாமல் பாலைக் காய்ச்சத் துடிக்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த மட்டில் நிறுத்தலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்து மாற்றம் குறித்து என்னுடைய புரிதலை இங்கு நினைக்கிறேன். இதில், மேலும் தெளிவு வேண்டின் விளக்குவதற்கு அணியமாக(தயார்) உள்ளேன். இதில், மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இதுபற்றி எழுத இன்னும் செய்திகள் கிடக்கின்றன. அவை நமக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆய்வு என்ற பெயரில் அப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

அதைப்பற்றி, அடுத்த இடுகையில் இன்னும் தொடர்வேன்.