தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் (1/3)

ஒருதலை
  • 1)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு வேகம் முக்கியம் என்கிறார்கள். இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் தமிழ் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வேகத் தடையாக அமைந்திருப்பவை தலையாய தாகத் தமிழ் எழுத்துகளின் ‘நெடுங்கணக்கு’ எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற வரிவடிவம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். போதாதற்கு இறுகிப்போன இலக்கணம் வேறு என்று இடித்துரைக்கிறார்கள்.

2)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்கு ஆங்கிலம் முக்கியம் என்கிறார்கள். அறிவும் அறிவியலும் ஆங்கிலத்திற்கே சொந்தம் என்பதால் அவற்றை முறையாக இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்குக்கூடத் தமிழுக்குத் திராணி இல்லை என எள்ளி நகையாடு கிறார்கள். கடினமான மொழியாக்கம் மற்றும் கலைச்சொற்கள் படாத பாடுபடுத்தி விடுகின்றன என்று அலுத்துக் கொள்ளுகிறார்கள். ஆங்கிலப் பெயர்கள், இன்றியமையாக் கலைச்சொற்கள் முதலியவற்றை ஆங்கில மூலத்தில் உள்ளபடியே உச்சரிக்கக்கூடிய அளவுக்குத் தமிழில் ஒலிகள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

  • 3)இது தகவல் யுகம் என்கிறார்கள். இங்குத் தமிழால் பிழைக்க முடியாது என்று சாபமிடுகிறார்கள். ‘கற்றது தமிழ்’ என்று வெள்ளித் திரையில் குத்திக் காட்டுகிறார்கள். உலகமய மாக்கல் சூழலில் உலகமொழியாகிய ஆங்கிலத்தால் மட்டுமே வாய்ப்புகளின் வாசல்கள் திறந்துவிடப்படுவதாக முரசு கொட்டுகிறார்கள். ஆங்கிலத்திற்கு இசைவாகத் தமிழை ‘பெண்டு’ நிமிர்த்தினால் மட்டுமே தமிழால் கொஞ்ச நஞ்சமாவது தாக்குப்பிடிக்க முடியும் என்று குறி சொல்லுகிறார்கள்.

மறுதலை
  • 4)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், தகவல் தொழில் நுட்பத்திற்கும் (த.தொ) அரசியல் பண்பாட்டுக்கும் இடையில் ஒருவித இயங்கியல் ரீதியான உறவு இருப்பதைக் கவனிக்க வேண்டும். எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியல்_பண்பாட்டு மொழிக்கு ஏவல் செய்வதாகத் தகவல்தொழில்நுட்பம் மாறிவிடுகிறது.

5)இதன் மற்றொரு முகமாக, எந்த அரசியல் பண்பாடு தகவல்தொழில்நுட்பத்தின் ஆளுகையின் கீழ்ப்பட்டு, தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் தடுமாறிக் கையறு நிலையில் நிற்கிறதோ, அந்த அரசியல் பண்பாட்டின் மொழியும் அதே கையறு நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொள்கிறது. எனவே, ‘மொழிக்கு வளையும் தகவல் தொழில்நுட்பமா? தகவல் தொழில் நுட்பத்திற்கு வளையும் மொழியா?’ என்ற வினா அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள உண்மையைக் கண்டுகொள்ள வேண்டும். எனில், எதற்காக மொழியில் மாற்றம் ?

  • 6)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், ஏறத்தாழ ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் (தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்ல) இந்தத் தகவல் யுகம் ‘புரட்சி’ யால் பயனடைபவர்கள் எத்தனை விழுக்காடு என்ற கேள்வியையும் கேட்டுவைக்க வேண்டியுள்ளது. இம் ‘மாபெரும் புரட்சி’ யுகத்தில் தமிழ் பேச மட்டுமே முடிந்த (எழுத்தறிவற்ற) தமிழர்கள் குறைந்தது 40 விழுக்காடு (இரண்டு கோடி) இருப்பார்கள் (இந்த 2.4 கோடிப் பேரும் தமிழ் எழுத்து சரியில்லை என்பதால் படிக்க மறுத்துவிட்டவர்கள் அல்லர்).

7)பள்ளி செல்லும் வயதிலுள்ள தமிழ்க் குழந்தைகளில் கணிசமானோர் முதுகில் குடும்பச் சுமை கொலுவீற்றிருக்கிறது. பள்ளி செல்வோரிலும் முக்காலே மூணு வீசம் பேர் அரசு/அரசுதவி பெறும் பள்ளிகளில், தகவல் யுகத்திற்கு வெகு தொலைவிலான தமிழ்வழிக் கல்வியில் தொலைந்து போயுள்ளார்கள். இதில் தேறிவந்து, கல்லூரி வாயிலை எட்டும் வெகு சிலரில் எத்தனை பேருக்கு இந்திய / தமிழக அளவில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகளின் வாயில் திறந்துவிடப்படுகிறது?

  • 8)உள்ளே நுழையும் பேறுபெற்ற ஓரிருவரில் எத்தனை பேருக்குத் தகவல் தொழில் நுட்பப் தொடர்பான பாடங்களில் இடம் கிடைக்கிறது? ஆக, இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்குமான ‘அறிவு -_ இடைவெளி’ அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. எனவே, யாரை முன்வைத்து மொழியில் மாற்றம்?

9)இது தகவல் யுகம் என்பதை நாம் மறுத்தற்கில்லை. எனினும், முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி பயின்ற அனைவருக்கும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புக் காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘ஐ.டி.’ பரபரப்பைத் தாண்டி, பத்து பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், தமிழ்வழிக் கற்றதாலேயே அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு நழுவிச் சென்று விடவில்லை என்பது தெரியும். ஏன், இன்றைய சூழலில்கூடக் தமிழ்வழிப் பயின்றவர்களில் எத்தனையோ பேர் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

விடுதலை
  • 10)தகவல் யுகத்தின் ‘ஒருதலை’க்கும் ‘மறுதலை’க்கும் இடையில் இன்று ‘விடுதலை’’யை எதிர்நோக்கித் தடுமாறிக் கொண்டுள்ளது தமிழ். இத்தகைய சூழ்நிலையில், தமிழில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமா? அப்படி அவசியமானால், எத்தகைய மாற்றங்கள்? என்ற கேள்விகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு உதவியாகச் சில தெளிவுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம். (2ஆம் பாகத்தில் தொடரும்..)
  • பாகம் 1 / பாகம் 2 / பாகம் 3

கருத்துகள் இல்லை: