எழுத்துச் சீர்மை: தமிழ்மணம் திரட்டியின் நிலைப்பாடு

தமிழ் எழுத்துச் சீர்மை விவகாரத்தில், தமிழ்மணம் திரட்டி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்து உள்ளது. அது இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது. அனைவரும் படிக்க வேண்டிய செய்தியிது. குறிப்பாக, இதற்கான மறுமொழிகள் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கன. கணினி நிரலாக்கப் பணிகளுக்கு எழுத்துச் சீர்மை மிகவும் தேவையா? என்ற கருத்தின் அடிப்படையில் மிக விரிவான கருத்தாடலை மறுமொழிப் பகுதியில் தவறாமல் படிக்கவும். -தமிழ் ஊழியன்


******************************************
******************************************

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு


தமிழ்மணம் இணையத்தளத்தினை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் குழுமம் (TMI Inc) தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் பயன்பாட்டிற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தமிழ் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பிறகு அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. இன்றைய இணைய தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் தமிழில் எழுதி வருகின்றனர். முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது தமிழில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெருகி உள்ளனர்.

இணையம் என்றில்லாமல் நாளிதழ்களும், அச்சு இதழ்களும், புத்தகங்களும் இன்று அதிகளவில் விற்கப்படுகின்றன. பல துறை சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. வணிக ரீதியில் இந்தப் புத்தகங்கள் விற்பதைக் கொண்டு வாசகர்கள் எண்ணிக்கையும் இன்று அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது. வெகுஜன ஊடகங்கள் தவிர பல சிற்றிதழ்களும், மாற்று இதழ்களும் முன் எப்பொழுதையும் விட அதிகளவில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகின்றன. தமிழ் வழியில் பொறியியல் படிப்பினை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் வாரயிறுதிகளில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட சில மாநிலங்களில், தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களது அமெரிக்கப் பள்ளிக்கூட மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இப்பள்ளிகள் அமெரிக்கக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழின் பயன்பாடு பல வழிகளிலும் முன்னெப்பொழுதையும்விட அதிகமாக நடந்து வருகிறது. தற்போதைய தமிழ் எழுத்து வடிவில் இதனை நாம் சாதித்து இருக்கிறோம்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழக அரசு தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாகவும், வருகின்ற செம்மொழி மாநாட்டில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பு ஒன்று கடந்த சனவரி 7ஆம் தேதியன்று வெளியான மாலை மலரில் வெளியாகி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இது குறித்த பரவலான விவாதம் இணையத்தளங்களிலும், தமிழ்க் குழுமங்களிலும் நடந்து வருகிறது.

எழுத்துச் சீர்திருத்தம் என்பது என்ன ?

தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.

இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக் காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை. இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

சீர்மையால் விளையும் கேடுகள்

இந்த எழுத்துச் சீர்மை ஏற்படுத்தப் பட்டால் தற்பொழுது வெளியாகி உள்ள எண்ணற்ற புத்தகங்கள் பயனற்றதாகி விடும். புதிய புத்தகங்களை வெளியிட வேண்டும். பல இணையத்தளங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் மறுபடியும் மாற்றப்பட வேண்டும். தற்பொழுது வழக்கில் உள்ள தமிழ் எதிர்காலத்தில் கல்வெட்டு தமிழ் போன்றதாகி விடும். வெகு இயல்பாக உள்ள தமிழ் பயன்பாடு பெருங்குழப்பத்திற்கு உள்ளாகும். தமிழின் பயன்பாடு வளர்ச்சியில் இருந்து தேக்க நிலையை அடையும்.

இத்தகைய ஒரு சீர்மை அவசியம் தானா என்ற கேள்வியை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும்.

தமிழ் மொழிக்கு இந்த சீர்மையால் நேரும் கேட்டினைத் தடுத்து நிறுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யத் தமிழ்மணம் முடிவு செய்திருக்கிறது. இதில் பதிவர்களின் ஆதரவினையும் தமிழ்மணம் வேண்டுகிறது.

இது குறித்த விரிவான வாசிப்பிற்குச் சில கட்டுரைகளைத் தமிழ்மணம் பரிந்துரை செய்கிறது

1.சுப.நற்குணன் - தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா?

2.நாக.இளங்கோவன் - எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்
3.முனைவர் மு.இளங்கோவன் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
4.மணி மு. மணிவண்ணன் - எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
5.முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன் - Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
6.பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் - எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு


புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக:

எழுத்துச்சீர்திருத்தத்தை எதிர்த்து
சொர்ணம் சங்கர்,
இரா. செல்வராஜ்,
இரமணீதரன்,
தங்கமணி,
சுந்தரவடிவேல்,
இளங்கோ,
தமிழ் சசி,
பாலாஜி பாரி

பி.குறிப்பு:- இதற்கு வந்த மறுமொழிகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை: