வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

தன்னுடைய தாய்மொழியின் எழுத்து வடிவத்தைக் காப்பதற்குச் சப்பான்காரன் பெரும்பாடு படுவதற்கும் அஞ்சுவதே இல்லை. எவ்வளவு சிக்கல் - சிரமம் எதிர்கொண்டு வந்தாலும், தொழில்நுடபம் வேகமாக வளர்ந்தாலும், படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடர்பபடுகள் ஏற்பட்டாலும் தங்கள் மொழியின் வரிவடிவத்தை நிலைப்படுத்துவதில் சப்பானியர் உறுதியாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்திற்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ சப்பானியர் தங்கள் எழுத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்துகொள்ளவில்லை. மொழியின் தனித்த அடையாளம் சிதைந்து; சீரழிந்துபோகும் அளவுக்கு எழுத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய வரிவடித்தின் தனி அடையாளத்தையும் தனிச்சிறப்பையும் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் - எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல சான்று.
//இரங்கானா அல்லது கதங்கானா முறையில் அல்லது ரோமானிய (ஆங்கில) எழுத்துகளில் சப்பானிய எழுத்துகளை அடித்தால், படவெழுத்துகள் வரும் முறையில் கணிப்பலகையை (Keyboard) அமைத்துள்ளனர். 'கஞ்சி' எழுத்துகளின் உச்சரிப்பினைத் தட்டச்சு செய்தால், கஞ்சி அச்சில் வரும் முறையில் விசைப்பலகையை அமைத்துக்கொண்டார்களே தவிர, விசைப்பலகையின் விசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எழுத்து வடிவங்களைச் சிதைத்துக் கொள்ளவில்லை. அன்றாடம் ஏறத்தாழ 2000 கஞ்சி வடிவங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளது. இதனால், மிகவும் மெதுவாகவே கணியச்சிட முடிகிறது.
  • இதனைத் தவிர்க்க ஒருவர் கண்டுபிடித்த முறையே பன்முரசு முறைக் கணிப்பலகை. சப்பானியர்கள் தங்கள் எழுத்தைச் சிதைக்கவில்லை. மாறாகத் தேவைக்கேற்ப கணினி விசைப்பலகையை அமைத்துக்கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். //
சப்பானியரின் இந்த உயர்ந்த மொழிமானம்; எழுத்து வடிவக் காப்புணர்வோடு, இன்று தமிழ் எழுத்துகளைச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் தமிழர்கள் சிலரின் மொழி உணர்வு; வரிவடிவக் காப்பு உணர்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஓர்ந்து பாருங்கள்.
  • இ, ஈ, உ, ஊகார தமிழ் எழுத்து வரிவடிவத்தைச் சிதைத்து புதிய வகையிலான எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்த துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு இதனைச் சிந்திக்க நேரமில்லாமல் போகலாம். அல்லது இதனைக் கண்டும் காணாததுபோல கண்மூடி - வாய்ப்பொத்தி மௌனியாக இருந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மைத் தமிழ் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றனர். அத்தகையவர் அன்புகூர்ந்து இதனைச் சிந்திக்க வேண்டும்; எழுத்துச் சீரழிப்பைத் தடுப்பதற்கு தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். காரணம்,
இப்போது இல்லாவிட்டால்; இனி
என்றுமே தமிழைக் காப்பாற்ற முடியாது.

5 கருத்துகள்:

ஈழக்கதிர் தி சொன்னது…

அன்புடையீர்,
வணக்கம்.
சப்பானிய வரிவடிவம் பற்றிய செய்தி யார் கூறியதில் இருந்து அல்லது எழுதியதில் இருந்து எடுத்தது என்னும் உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

தமிழ் ஊழியன் சொன்னது…

@ஈழக்கதிர் தி அவர்களே,

இவ்விடயம் குறித்து ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

மூலம் காண்க:-

http://thiru-padaippugal.blogspot.com/2010/06/blog-post_9159.html

அப்பதிவு இங்கு விரைவில் வெளியிடப்பெறும்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பகிர்வு.

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

நன்றி. விரைவில் இங்கே அதன் பதிவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
தி.ஈழக்கதிர்

Karthick Chidambaram சொன்னது…

மிக தேவையான பதிவு. தமிழை காப்பாத்துங்கப்பா ...!