எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவிப்பு?




விரிவான செய்தி..

எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: மே16, புதுச்சேரி



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.


நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,
உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
திரு.விருபா. குமரேசன் சென்னை
திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,


அனைவரையும் வருக என வரவேற்கும்:-
இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டிம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன் செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-
1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு
2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி
3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்
4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ
5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்:-
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
தொடர்புக்கு:-
இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)



தமிழ் எழுத்துகளில் இருக்கும் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சில தரப்பினர் முயன்று வருவது குறித்து கடந்த இடுகையில் எழுதி இருந்தேன். இந்த எழுத்து மாற்றத்தைச் செய்வதற்கு முன்மொழியப்படும் எழுத்து அமைப்பு பற்றியும் விளக்கி எழுதியிருந்தேன். மேலும், இந்த மாற்றத்தினால் தமிழ்மொழிக்குத் துளியளவு நன்மையும் கிடையாது என்பதையும் எழுதிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இந்தத் தொடரில், தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் முன்னைக்கப்பட்டுள்ள இன்னுஞ்சில முன்மொழிவைப் (Suggestion) பற்றி அறிந்துகொள்ள உங்களை அழைக்கிறேன்.


இன்று தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த மேதைகளின் கண்களை அதிகம் உறுத்துவது உகர, ஊகார எழுத்துகள்தாம். அதனால், இவ்விரு வரிசை எழுத்துகளை மாற்றி அமைக்கவே முயற்(சூழ்ச்)சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் எனச் சீர்த்திருத்த மேதை ஒருவர் சொல்லியிருக்கும் எழுத்து வடிவங்கள் கீழே உள்ளன.

மாதிரி 1:-

இன்னொரு ஆய்வாளர், தமிழ் மற்ற மொழிகளுக்கு இணையாகச் செயல்பட வேண்டுமானால் கீழே உள்ளபடி தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்கலாம் என முன்மொழிகிறார்.

மாதிரி 2:

இப்படியாக, ஆளாளுக்குத் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைக்க முனைந்தால், தமிழ் வரிவடிவத்தின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள்?

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து பாருங்கள்?

இந்தச் சூழலில், தமிழ்மொழியில் புதிய எழுத்து மாற்றத்தை அறிமுகப்படுத்த விரும்பும் சிலர், மிகவும் நாசுக்காக சில வரலாறுக் காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். அவை:-

1)தமிழ் எழுத்துகள் பல நூற்றாண்டுகளாக மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

2)வீரமாமுனிவர் எகரத்திலும் ஒகரத்திலும் (எ, ஏ, ஒ, ஓ) மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

3)தந்தை பெரியார் காலத்தில் செய்யப்பட்ட எழுத்து மாற்றம் இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. (லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, ணை, னொ, னோ)

மேலே சொல்லப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ்மொழியில் ஒரு செப்பமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இனியும் எந்தவித சீரமைப்போ மாற்றமோ தேவையில்லாத அளவுக்கு இன்று தமிழ்மொழி வடிவம் பெற்றுவிட்டது எனலாம். தற்போது இருக்கும் தமிழ் வரிவடிவங்கள் தகவல்தொழில்நுட்ப உலகத்திலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக, இனியும் தமிழைச் சீர்த்திருத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் எழுத்து மாற்றத்தை வலிந்து செய்ய விரும்புகிறார்கள் என்றால், அதில் ஏதோ சில மறைமுக நிகழ்ப்பு (Hidden Agenda) அல்லது கமுக்கத் திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அப்படி ஏதும் இருக்குமானால், அது கண்டிப்பாக கீழே கூறப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்குத் தொடர்புடையதாகவோதான் இருக்க முடியும். அவை:-

1)நீண்ட காலத்தில் தமிழின் இருப்பை மழுங்கடித்தல்.

2)தமிழ்மொழியின் தனி அடையாளத்தைச் சிதைத்தல்.

3)தமிழ் நெடுங்கணக்கின் செவ்வியல் அமைப்பைச் சின்னபின்னப்படுத்துதல்.

4)தமிழ் வரிவடிவத்துக்கே உரிய தனி எழுத்தமைப்பை அழித்தொழித்தல்

5)தமிழ் எழுத்துகள் தனி எழுத்துகள் அல்ல. மாறாக வடமொழி எழுத்துகளிலிருந்து திருந்தவை என்ற ஒரு தோற்றத்தை எதிர்காலத்தில் பரப்புதல்.

6)பழைய தமிழ் கருவூலங்களை படிக்க முடியாமல் செய்தல்.

7)தமிழின் தொன்மையில் ஐயத்திற்குரிய பிறழ்ச்சிகள் எதிர்காலத்தில் உண்டாவதற்கு வழியமைத்துக் கொடுத்தல்.

8)தமிழ் இலக்கண, இலக்கிய, அறிவு, பண்பாட்டு, வரலாற்றுச் செல்வங்கள் எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேருவதைத் தடுத்தாட்கொள்ளுதல்.

9)தகவல்தொழில்நுட்பம், கணினி, இணையம் சார்ந்த துறையில் தமிழ்மொழி அடைந்துவரும் வேகமான முன்னேற்றங்களை முறித்துப்போடுதல்.

10)நாளைய மின்னணுவியல் ஊழியில் தமிழ்மொழிக்கு எந்தவொரு இடமும் கிடைத்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துதல்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இவற்றைப்பற்றி எல்லாம் சிறிதுகூட கவலையே படாத எழுத்துச் சீர்திருத்த மேதைகள் சிலர் தமிழ் எழுத்துகளை மாற்றியே ஆகவேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருவதாக அறியப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல, கணினி உலகம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் பார்வை, தமிழ் கற்றல், தமிழ் வளர்ச்சி, எழுத்துச் சீர்மை என்று பல பூதாகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் என்ற பெயரில் நுனிப்புல் மேய்வுகளை வழங்கி தமிழ் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் நல்லறிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் – கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் எழுத்து மாற்றம் தேவையற்றது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவ வேண்டும்.

தமிழ் வரிவடிவத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிகழ்ப்பையும் (Agenda) முறியடித்துப்போட வேண்டும்.